Magalin Alu Kural

என்னை ஒரு முறை கண்விழித்து பார்  அப்பா!

உன் விரல் பிடித்து நடந்த தெரு இன்று
பூக்களால் நிரப்பப்பட்டது !

நான்  வரும் நேரம் குறைந்தால் என் வருகையை
எதிர்பார்த்து நிர்ப்பாய் !
இன்று .....
நான் உன் அருகில் இருப்பது கூட அறியாமல்
கண்மூடி தூங்குகிறாயே
என்னை ஒரு முறை பார் அப்பா !

நான் அழுதால்  தாங்க முடியாமல் 
நான்  கேட்பதையெல்லாம்   வாங்கிக்கொடுத்தாயே ! 
என்னை ஒரு முறை பார்  அப்பா  என்று அழுகிறேனே .......
என்  அழு  குரல்  கேட்கவில்லையா அப்பா !

என்  தூக்கம் கலைக்காமல் நான் கண்மூடி 
தூங்குவதை  ரசித்தாய்  அன்று !
இன்று ....
நீ  தூங்குவதை  ரசிக்க  முடியாமல் 
உன்  தூக்கத்தை கலைக்கிறேனே .....
என்னை ஒரு முறை பார் அப்பா  !


சுமையாக  இருக்கிறேன்  என்று  பத்து மாதத்தில் 
இறக்கி  வைத்தாள் 
என்  தாய் .
அனால் , சுமையாக இருக்கிறேன் என்று  ஒரு 
நாளும் என்னை  இறக்கியது  இல்லை  நீ .

நான் சென்ற  பாதையெல்லாம் என் நிழலாக 
வந்தாய் 
இன்று .....
உன்  பின்னால் வருகிறேனே 
என்னை ஒருமுறை பார் அப்பா !

நான் தத்தி தவழ்ந்து  நடப்பதை பார்த்து 
மகிழ்ந்தாய்  அன்று !
இன்று ...
மற்றவர்  உன்னை  சுமக்க நான்  உன்  பின்னால் 
கண்ணீரோடு  வருகிறேனே 
என்னை ஒருமுறை பார் அப்பா !

ஊர்  தாண்டி உன்னை அழைத்து  செல்லும்போது 
சுமை தாங்காமல் இறக்கி  வைத்து ஓரமாக 
நிற்க......
கண்ணில்  வடியும் கண்ணீர்  போதவில்லை  என்று 
தண்ணீர்  குடம் உடைக்கிறேனே   இன்று 
என்னை ஒருமுறை பார் அப்பா !

உன்னை  மட்டும் விட்டு விட்டு .
வந்த பாதையில்  நான்  செல்கிறேனே 
திரும்பி வர முடியாத பாதையில் நீ  மட்டும் ஏன்  அப்பா 
செல்கிறாய்!
என்னை ஒருமுறை பார் அப்பா ! 

இறுதி  வரை என்  முகம்  பார்க்காமல்  இப்படி 
உறங்குகிறாயே 
என்னை  ஒரு முறை  கண்விழித்து  பார்  அப்பா!











Comments

Post a Comment

Popular posts from this blog

Thirumayam Malaikkottai